
முட்டி மோதி முதன் முறையாக இந்த உலகத்தை
எட்டி பார்க்கையில் - கண்ணீர் அறியாமை
நடுஇரவில் செய்வதறியாமல் அம்மாவின் அரவணைப்புக்கு
ஏங்குகையில் - கண்ணீர் பிணைப்பு
முதல் நாள் பள்ளி செல்ல பயந்து அப்பாவின் கையை
விடாமல் பற்றிகொள்கையில் – கண்ணீர் தவிப்பு
விடுதியில் விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் திரும்ப
திரும்ப அம்மா பார்க்கையில் – கண்ணீர் ஏக்கம்
பரீட்சைக்கு முதல் நாள், பாசமே வடிவான பாட்டி இறைவனடி
சேர்ந்த செய்தி நெஞ்சை அடைக்கையில் - கண்ணீர் வேதனை
முதல் நாள் அந்நியமாக தோன்றிய கல்லூரி விடுதி, கடைசி நாள்
நண்பனை கட்டியணைத்து பிரிகையில் – கண்ணீர் நட்பு
வேலைதேடி துவண்டவனை, நான் இருக்கிறேன் நீ வெல்வாய்
என காதலி கட்டியணைக்கையில் – கண்ணீர் கவிதை
அப்பன் சத்தியத்திற்காக, எனை மறந்து எவனோ ஒருவனோடு
மணமேடையில் அவள் நிற்கையில் – கண்ணீர் வலி
படிப்படியாக எனை பார்த்து பார்த்து வளர்த்த தந்தையை, கடைசியாக
மரணப்படுக்கையில் பார்த்தபொழுது – கண்ணீர் இழப்பு
உறவின் உன்னதத்தை உணரவைத்த , என் பிஞ்சுக்குழந்தையை
முதல்முறை சுமக்கையில் - கண்ணீர் உயிர்
கடைசியாக வந்த இடத்திற்கு திரும்புகையில்
கண்ணீர் – வாழ்க்கை
மனேஷ்....